தமிழ் இலக்கியமன்றப் பேரவை

மாணவ ஆசிரியர்களிடையே தமிழார்வத்தை மேம்படுத்தும் விதமாக தமிழ் இலக்கிய மன்றப் பேரவை செயல்பட்டு வருகிறது. மாணவ ஆசிரியர்கள் தங்களுடைய பேச்சு, கவிதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றில் உள்ள திறமைகளை தங்களது கல்லூரியில் வெளிப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் பிற கல்லூரிகளிலும் வெளிப்படுத்துவதற்கு ஒரு களமாக இப்பேரவை செயல்பட்டு வருகிறது. கருத்தரங்கம் நடத்துவது, பட்டிமன்றம் நடத்துவது, முக்கியத் தினங்களைக் கொண்டாடுவது, இலக்கிய இணையவழித் திறனறித் தேர்வு நடத்துவது, ஆசிரியர் தகுதித் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மொழிசார்ந்த பயிற்சி அளிப்பது, இணைய வழியிலான கட்டுரைப் போட்டி நடத்துவது என்று இப்பேரவை விரிவடைந்து செயல்பட்டு வருகிறது. மாணவர்களுடைய படைப்புகளை பிரபலமான செய்தித்தாளில் வெளிவர செய்வதில் இப்பேரவை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

மாணவர்களுடைய மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்ட இத்தமிழ் இலக்கியமன்றப் பேரவை மொழியறிவை வளர்த்தல், போட்டிகள் மூலம் கலையார்வத்தை ஊக்குவித்தல், பாரம்பரிய கலைகளைப் பாதுகாத்தல், இதழ்கள் வெளியிடுதல் போன்ற செயல்பாடுகளினால் தன்னை முதன்மைப்படுத்திக் கொள்கிறது.

மாணவ ஆசிரியர்களிடையே தமிழார்வத்தை மேம்படுத்தும் விதமாக தமிழ் இலக்கிய மன்றப் பேரவை 11-02-2020 அன்று துவக்கப்பட்டது. தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழாவினை திருமதி எஸ். ஜெயந்தி,, ஹிந்து வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி நாகர்கோவில் தமிழாசிரியை அவர்கள் கருத்துரை வழங்கி துவக்கி வைத்தார்கள். கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.கிருஷ்ணப்ரியா சிறப்புரை வழங்கி சிறப்பித்தார்கள். திருமதி.ச.வ.சஜி ரேகா, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை அவர்கள் வரவேற்புரை வழங்கி ஒருங்கிணைத்தார்கள். இந்நிகழ்ச்சியினை வி.பிந்து, டி.ஜெனிஷா மாணவ ஆசிரியைகள் தொகுத்து வழங்கினார்கள்.

தமிழ் இலக்கியப் பேரவை சார்பில் தமிழ் இலக்கிய இணைய வழித் திறனறித் தேர்வு 24-06-2020 முதல் 28-06-2020 அன்று வரை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையில் நிகழ்த்தப்பட்டது. இத்திறனறித் தேர்வில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இத் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பற்ற அனைவருக்கும் இணைய வழி சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழ் இலக்கியப் பேரவை- 2021 இணைய வழியிலான தமிழ் கட்டுரை எழுதும் போட்டி

மாணவ ஆசிரியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “இன்றைய சூழலில் கல்வி மீதான கொரோனா வைரஸின் தாக்கம்” என்ற தலைப்பில் தமிழ் இலக்கியப் பேரவை சார்பாக இணைய வழியிலான தமிழ் கட்டுரைப் போட்டி 29-05-2021 அன்று நடத்தப்பட்டது. போட்டியின் ஒருங்கிணைப்பாளராக அமிர்தா கல்வியியல் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை திருமதி.எஸ்.வி.சஜி ரேகாவும், நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினராக அமிர்தா கல்வியியல் கல்லூரியின் துணை முதல்வர் திரு.எஸ்.சந்திர மோகனனும் கலந்துகொண்டனர். கட்டுரையை சென்னை பரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியை திருமதி.ஸ்ரீ தேவி மற்றும் இந்துக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் திரு.கனிஷ் கண்ணன் ஆகியோர் மாணவ ஆசிரியரின் சொற்களஞ்சியம், விளக்கக்காட்சி மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கினர்.. கட்டுரைப் போட்டியில் 21 மாணவ ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இக்கட்டுரைப் போட்டியின் நோக்கம் மாணவ ஆசிரியர்களின் சிந்தனை மற்றும் எழுதும் திறனை மேம்படுத்த ஊக்குவிப்பதாகும். நிகழ்ச்சியில் அனைத்து ஆசிரியர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கட்டுரைகளை மாணவர் ஆசிரியர்கள் சிறப்பாக எழுதியுள்ளனர்.

இணைய வழியிலான தமிழ் கட்டுரை எழுதும் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்,
  • கௌசல்யா ஜே.எம் (இரண்டாம் ஆண்டு மாணவி)
  • யோகா லெக்ஷ்மி வி (இரண்டாம் ஆண்டு மாணவி)